நாகர்கோவில், மார்ச் 18: பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்த பெருஞ்சாணி அணை மூடப்பட்டது. குமரி மாவட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இவ்வாறு தண்ணீர் திறந்து விடப்படும் அணைகள் பிப்ரவரி மாதம் கடைசியில் மூடப்படும். பின்னர் மீண்டும் ஜூன் மாதம் முதல் வாரம் திறக்கப்படும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவையொட்டி அணையில் இருந்து தண்ணீர் விநியோகம் நீட்டிக்கப்பட்டு திருவிழா முடியும் வரை தண்ணீர் திறந்து விடப்பட்ட பின்னர் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அணைகள் மூடப்படும்.