புதுடெல்லி: பெட்ரோல் பங்குகளில் இ20 மற்றும் சாதாரண பெட்ரோல் ஆகியவற்றில் விருப்பமானதை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டுமென வரும் 4ம் தேதி பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணி செல்வதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘பெட்ரோல் பங்குகளில் இ20 மற்றும் சாதாரண பெட்ரோல் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் உரிமையை நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இ20 கலந்த பெட்ரோலுக்கு குறைவான விலையை நிர்ணயிக்க வேண்டும்.
இ20 பெட்ரோல் வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் ஒன்றிய அரசு கூறுகிறது. அந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 4ம் தேதி சுமார் 100 பேருடன் பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று இ20 பெட்ரோல் குறித்த தங்கள் அனுபவங்களையும் கவலைகளையும் பகிர்ந்து கொண்டனர். இ20 பெட்ரோலால் தங்கள் வாகனங்களில் ஏற்பட்ட சிக்கல்களையும் தெரிவித்தனர்.
