காமன்வெல்த் போட்டி; ஒரே நாளில் 6 பதக்கம் குவித்த இந்தியா: ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

கிளாஸ்கோ:23வது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 9ம்நாளான நேற்று இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் பதக்கம் கிடைத்தது. ஜூடோவில் மகளிர் 48 கிலோ எடை பிரிவு பைனலில் இந்தியாவின் அஸ்மிதா டே 2-1 என கனடாவின் ஹெய்டி குவாச்சை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் வரலாற்றில் ஜூடோவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். இதேபோல் ஆடவர் 60 கிலோ எடை பிரிவில் 23 வயதான டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷ் சிங், பைனலில் ஆஸ்திரேலியாவின் ஜோசுவா காட்சை 10-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். காமன்வெல்த் ஜூடோ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஹர்ஷ் சிங் பெற்றார்.

ஜூடோ மகளிர் 57 கிலோ எடை பிரிவில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான யாமினி மவுரியா இறுதிபோட்டியில் இங்கிலாந்தின் அசெலியா டோப்ராக்கை எதிர்கொண்டார். இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இருவராலும் புள்ளிகள் பெற முடியாததால், போட்டி ‘கோல்டன் ஸ்கோர்’ என்ற கூடுதல் நேரத்திற்குச் சென்றது. இதில் 3 ‘ஷிடோ’ அபராதம் பெற்றதால் யாமினி துரதிர்ஷ்டவசமாகத் தோல்வி அடைந்து வெள்ளியுடன் திருப்திப்பட வேண்டியிருந்தது.

ஈட்டி எறிதலில் நள்ளிரவில் நடந்த இறுதி போட்டியில் 3 இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இதில் நீரஜ் சோப்ரா தனது 2வது வாய்ப்பில் அதிகபட்சமாக 85.83 மீட்டர் தூரம் எறிந்த வெள்ளிபதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான 24 வயது யஷ்வீர் சிங், தனது கடைசி முயற்சியில் 85.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே 89.75 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையை நிகழ்த்தி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். மற்றொரு இந்தியர் ரோகித் யாதவ் 81.56 மீட்டர் தூரம் வீசி 7வது இடத்தை பிடித்தார்.  இவை தவிர டெகாத்லானில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெண்கலம் வென்றார். 9வது நாள் முடிவில் இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் 9வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா , இங்கிலாந்து, கனடா முதல் 3 இடங்களில் உள்ளன.

அம்மா தைரியத்தால் அப்பாவின் கனவு நனவானது;
ஜூடோவில் மகளிர் 48 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்த திரிபுராவை சேர்ந்த அஸ்மிதா டே (23) கூறியதாவது: பைக் மெக்கானிக்கான அப்பா எனக்கு எப்போதும் மிகப்பெரிய தூணாக இருந்து ஆதரவளித்தார்., கடந்த டிசம்பர் மாதம் அவர் திடீரென காலமானதால் எனது உலகமே முடிந்துவிட்டது என நினைத்தேன். அப்பா மறைந்த 10 நாட்களிலேயே எனது அம்மா என்னை மீண்டும் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். இது எனது முதல் காமன்வெல்த் போட்டி, இதிலேயே தங்கம் வென்றது எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. பதக்கம் எனது நாட்டிற்கும், மாநிலத்திற்கும் (திரிபுரா), நான் பணிபுரியும் காவல் துறைக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அறிவேன். அப்பா உயிரோடு இருந்து நான் தங்கம் வென்றதை நேரில் பார்த்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார். அவர் இப்போது என்னுடன் இல்லை என்றாலும், நிச்சயம் மேலே இருந்து என்னை ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார். எனது அம்மா கொடுத்த தைரியத்தால்தான் அப்பாவின் கனவை என்னால் இன்று நனவாக்க முடிந்தது, என்றார்.

Related Stories: