காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி பதக்கம்: 10,000 மீ.ஓட்டத்தில் குல்வீர் சிங், பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் அசத்தல்

கிளாஸ்கோ: 23வது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் 123 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 6ம் நாளான நேற்று இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் இந்தியாவின் குல்வீர் சிங், வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றில் இடம்பிடித்தார்.

குல்வீர் சிங் பந்தய தூரத்தை 27 நிமிடங்கள் 49.78 வினாடிகளில் (27:49.78) கடந்து 2வது இடத்தைப் பிடித்தார். மைதானத்தில் கொட்டித்தீர்த்த பலத்த மழை மற்றும் ஈரமான ஓடுதளத்திலும் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். பந்தயம் முழுவதும் முன்னணி வீரர்களின் குழுவோடு ஓடிய குல்வீர், கடைசி மின்னல் வேகத்தில் முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார். காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவின் கை ராபின்சன் 27 நிமிடம் 48.93 வினாடிகளில் கடந்து தங்கமும், ஐல் ஆஃப் மேன் தீவின் டேவிட் முல்லார்கி,27 நிமிடம் 50.28 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கமும் வென்றனர்.

பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 69 கிலோ எடை பிரிவில் களம் இறங்கிய அவர், ஸ்நாட்ச் பிரிவில் 101 கிலோ , கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 126 கிலோ என மொத்தம் 227 கிலோ எடை தூக்கி 2வது இடம் பிடித்தார். அவரது வாழ்நாளின் மிகச்சிறந்த செயல்திறன் இதுவாகும். 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் (71 கிலோ பிரிவு) தான் வென்ற வெண்கலப் பதக்கத்தை, இந்த முறை வெள்ளியாக ஹர்ஜிந்தர் கவுர் தரம் உயர்த்தியுள்ளார். கனடாவின் ஷார்லட் சிமோனோ மொத்தம் 235 கிலோ எடையுடன் தங்கம் வென்றார். 6ம் நாள் முடிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 9வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் கனடா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து , நைஜிரியா முறையே 2 முதல் 5வது இடங்களிலும் உள்ளன.

குடும்பத்திற்கு பதக்கத்தை அர்ப்பணித்த ஹர்ஜிந்தர்;
பளுதூக்குதலில் வெள்ளி வென்ற 29வயதான ஹர்ஜிந்தர் கவுர் பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் மெஹாஸ் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவரின் தந்தை சாஹிப் சிங் சாதாரண விவசாயி. தாயார் குல்தீப் கவுர் இல்லத்தரசி. பளுதூக்குதலுக்கு வருவதற்கு முன், அவர் கபடி மற்றும் கயிறு இழுத்தல் ஆகிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். அவர் கூறுகையில், சர்வதேச அரங்கில் இந்தியாவிற்காக மீண்டும் ஒருமுறை பதக்கம் வென்று நாட்டின் பெருமையை நிலைநாட்டியதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை தனது குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கிறேன்.

Related Stories: