பள்ளிப்பட்டு, ஜூலை 29: திருவள்ளூர் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் சார்பில் ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில், செல்லாத்தூர், விளக்கணாம்பூடி ஆகிய கிராமங்களில் மண் மற்றும் நீர் பரிசோதனை சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, மண் மற்றும் நீர் மாதிரி விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து மண் வளம், நீரின் தரம், நிலத்தின் ஊட்டச்சத்து நிலை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மண் பரிசோதனை அடிப்படையாக கொண்டு உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு குறித்து வேளாண்மை அலுவலர்கள் விளக்கினர். பயிர் சாகுபடி அதிகரிக்க, மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விவசாய முறைகள் எடுத்துரைக்கப்பட்டது.
