கூடலூர், ஜூலை 21: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவாலா பகுதியில் வசிப்பவர் சவுகத் அலி. இவரது மகன் முஹம்மது சினான் லத்தீப் (21). இவர் எகிப்து நாட்டில் உள்ள அல்ஹசர் பல்கலைக்கழகத்தில் அரபு உயர்கல்வி படிப்பதற்காக தேவாலாவிலிருந்து புறப்பட்டு 13 நாடுகளைக் கடந்து சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செல்ல உள்ளார். தேவாலாவில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட இவரை குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நேற்று காலை வழி அனுப்பி வைத்தனர். இங்கிருந்து கன்னியாகுமரி சென்று கன்னியாகுமரியில் இருந்து தனது பயணத்தை இவர் ஆரம்பிக்க உள்ளார்.
கன்னியாகுமரியில் புறப்பட்டு தெற்கு கடற்கரை நகரங்கள் வழியாக சைக்கிளில் குஜராத் சென்று அங்கிருந்து கப்பலில் ஈரானை சென்றடையும் இவர், ஈரானில் இருந்து துருக்கி, ஈராக், குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ, ஓமன், சவூதி அரேபியா, ஜோர்டான், பாலஸ்தீனம் வழியாக எகிப்தை சென்றடைய உள்ளார். சுமார் 300 நாட்கள் தனது பயணத்தை திட்டமிட்டுள்ள இவர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 100 கிமீ.,பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். வழியில் உள்ள பெட்ரோல் பங்குகள் மற்றும் காவல் நிலையங்களை ஒட்டி டென்ட் அமைத்து ஓய்வு எடுக்கவும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இரவு மற்றும் பகல் நேரங்களில் பயணத்தை தொடர உள்ளார்.
இவரது பயணத்திற்கு தேவையான பொருளாதார உதவிகளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கியுள்ளனர். மேலும் செல்லும் வழியில் தொண்டு அமைப்புகள் மூலம் இவருக்கு தேவையான உதவிகள் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
