நாகை, மார்ச் 15: இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தின் தொடக்க விழாவையொட்டி வேதாரண்யம் அருகே மூலக்கரை கிராமத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணியை கலெக்டர் பிரவீன்பிநாயர் துவக்கி வைத்தார். 2022 ஆகஸ்ட் 15ம் தேதியுடன் இந்திய சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தலைமையில் 259 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு தேசிய, சர்வதேச அளவில் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி வரையிலான நடைபயணத்தை துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடந்த வரலாற்று சிறப்புமிக்க உப்பு சத்தியா கிரகத்தை நினைவு கூறும் வகையில் கடந்த 12ம் தேதி சுதந்திர போராட்ட நினைவு சைக்கிள் பயணம் திருச்சியில் துவக்கி வைக்கப்பட்டது.