விருதுநகர், ஜூலை 20: விருதுநகரில் நகராட்சி பள்ளி சுற்றுச் சுவரை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை மாணவ,மாணவிகளின் நலன் கருதி உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் நகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட பர்மா காலனி, பாவாலி சாலை இணையும் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான முஸ்லீம் உயர் நிலைப் பள்ளி உள்ளது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ,மாணவிகளின் நலன் கருதி பள்ளியின் முன்புறம் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
இதனை ஆக்கிரமித்து தேநீர் கடை, புரோட்டோ ஸ்டால், கறிக்கடை உள்ளிட்ட ஏராளமான கடைகளை தனி நபர்கள் நடத்தி வருகின்றனர். பள்ளி நேரங்களில் சுவரையொட்டி அடுப்பு வைத்து சமையல் செய்தல், வடை மற்றும் டீ தயாரிக்கும் போது சிறு தீ விபத்து ஏற்பட்டால் கூட பள்ளிக்குள் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இரவு நேரங்களில் ஆக்கிரமிப்பு கடைகளுக்குள் சமூக விரோத செயலில் ஈடுபடும் மர்ம நபர்கள், மது குடித்து விட்டு, காலி பாட்டில்களை, பள்ளி வளாகத்திற்குள் தூக்கி எறிவதாகவும் கூறப்படுகிறது. பள்ளி சுற்றுச்சுவர் அருகே மாணவிகளுக்கான கழிப்பறை உள்ளதால், அச்சத்தில் இருப்பதாக பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். பள்ளிச்சுற்று சுவரை ஆக்கிரமித்துள்ளர்வர்களால், அப்பகுதியில் பஸ், கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.
எனவே, விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமான பள்ளியின் சுவரை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
