திருத்தணி, ஜூலை 28: திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் பிரசார பயணத்தை திமுக தொண்டர் திருத்தணியில் நேற்று தொடங்கினார். திருத்தணி அருகே அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சைக்கிள் சஞ்சீவி(52), திமுக தொண்டர். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஊர் ஊராக சென்று பொதுமக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டவர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பெற்ற பயன் குறித்து விளக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் பிரசார பயணத்தை திருத்தணியில் நேற்று சைக்கிள் சஞ்சீவி தொடங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி இருசக்கர வாகன பிரசார பயணத்தை தொடங்கி வைத்தார். மூன்று மாதங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கு சென்று திமுக ஆட்சியின் திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பெற்ற பயன் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக சைக்கிள் சஞ்சீவி தெரிவித்தார்.
