தேனி: தேனி மாவட்டம் கோம்பைதொழு அருகேயுள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவிப் பகுதிக்கு இன்று (ஜூலை 17) முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை முற்றிலும் தடை விதித்துள்ளது. சீரமைப்புப் பணிகளுக்காக இந்த தடை விதிக்கப்படுவதாக வனத்துறை கூறி உள்ளது. மேலும் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடியும் வரை, இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசியிருக்கும் வனத்துறை அதிகாரிகள், மேகமலை அருவிப் பகுதியில் பாதுகாப்புத் தடுப்புகள் சேதமடைந்து உள்ளன மற்றும் உள்கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தான் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றன. எனவே மறுசீரமைப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடையும் வரை சுற்றுலா பயணிகளுக்கான இந்த தடை அமலில் இருக்கும் என கூறி உள்ளனர்.
இதனிடையே தடையை மீறி யாரும் அடர்ந்த வனப்பகுதிக்குள்ளோ அல்லது அருவிப் பகுதிக்குள்ளோ நுழைவதைத் தடுக்க, வனப்பகுதி சோதனச் சாவடிகளில் கூடுதல் வனப்பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த தடையை மீறி ரகசியமாக அருவிப் பகுதிக்குச் செல்பவர்கள் மீது வனச்சட்டங்களின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
