புதுடெல்லி: பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன்களை விரைவுபடுத்த ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான செமிகான் 2.0 திட்டத்திற்கும், ரூ.62,500 கோடி மதிப்பிலான செல்போன் உற்பத்தி திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ‘இந்திய செமிகண்டக்டர் மிஷன்’ திட்டத்தின் முதல் கட்டத்தை தொடர்ந்து செமிகான் 2.0 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டர் உபகரணங்கள், மூலப்பொருட்கள், உற்பத்தி ஆலைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தும். இத்திட்டத்தின் மூலம் உள்நாட்டு தயாரிப்பு சிப்களின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும் என ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்புதிய திட்டத்தின் மூலம் ரூ.4 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும் இத்திட்டத் காலத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் உற்பத்தி நடைபெறும் என்றும் ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறது.
இதே போல, செல்போன் உற்பத்தி திட்டத்தின் மூலம் செல்போனுக்கான முக்கிய உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்வதற்கும், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்யவும் இந்திய நிறுவனங்களுக்கும் கூடுதல் ஆதரவு அளிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம், சுமார் ரூ. 39 லட்சம் கோடி மதிப்பிலான செல்போன் மொத்த உற்பத்தி நடைபெறும் என்றும், ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என்றும், சுமார் 60,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறது.
மேலும், ரூ.3,907 கோடி மதிப்பீட்டில் ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் 2 ரயில்வே திட்டத்திற்கும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.25,500 கோடி செலவில் 2 நெடுஞ்சாலை திட்டத்திற்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
* 9 புதிய யூரியா உற்பத்தி ஆலைகள்
நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான யூரியாவில் தன்னிறைவு அடையும் நோக்கில், 1 கோடி டன் உற்பத்தி திறன் கொண்ட 8 முதல் 9 புதிய எரிவாயு அடிப்படையிலான ஆலைகளை அமைப்பதற்கான புதிய தேசிய முதலீட்டு கொள்கைக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
