தெரு நாய் கடித்து 45 நாட்களாக சிகிச்சை எடுக்காத தொழிலாளி பலி

 

சென்னை, ஜூலை 16: சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்தவர் முருகன்(45). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த 45 நாட்களுக்கு முன்பு கோட்டூர்புரம் சூர்யா நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றபோது, தெரு நாய் ஒன்று இடது காலில் கடித்து காயம் ஏற்பட்டது.அதை பெரிதுபடுத்தாமல் முருகன் மதுவாங்கி வந்து குடித்துள்ளார். இதற்கிடையே தெரு நாய் கடித்த இடத்தில் காயம் பெரிதாக இருந்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அறிவுறுத்தியதின் படி, நேற்று முன்தினம் முருகன் சைதாப்பேடடை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை முருகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

உடனே உறவினர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் இதுகுறித்து உறவினர்கள் அளித்த தகவலின்படி கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் கடித்து 45 நாட்கள் சிகிச்சை எடுக்காமல் நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: