ஸ்பிக்நகர் அருகே பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?

 

ஸ்பிக்நகர், ஜூலை 15: ஸ்பிக்நகர் அருகே பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து வரும் குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்பிக்நகரை அடுத்துள்ள அத்திமரப்பட்டி பொன்னகரத்தில் தூத்துக்குடி மாநகராட்சி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே அத்திமரப்பட்டி கிராமம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் இந்த கிராமம் முழுவதும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அத்திமரபட்டி கிராமம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அத்திமரப்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி, பயன்பாடு இல்லாத காரணத்தால் போதுமான பராமரிப்பின்றி ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டு காணப்படுகிறது. இதன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அரசு மருத்துவமனை உள்ளதால் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக விளங்குகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சிறுசிறு விரிசல்களை சரி செய்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: