சிவகங்கை, ஜூலை 15: தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதுகுறித்து கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி அதன் ஒரு பகுதியாக தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சிவகங்கை மாவட்ட அளவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இன்று (ஜூலை 15ம் தேதி, புதன் கிழமை) காலை 10 மணிக்கு சிவகங்கை சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் (அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், பதின்ம பள்ளிகள்) படிப்பவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். கட்டுரை போட்டிக்கான தலைப்புகளாக தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை மற்றும் பேச்சு போட்டிகளுக்கான தலைப்புகளாக நான் விரும்பும் தமிழ்நாடு, அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு, இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வீரம் செறிந்த தமிழ்நாடு ஆகியனவாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
