திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த அரசன்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியராக ஆண்டனி லூயிஸ் மித்யாஸ் (50) பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் மதியம் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டு பிரிவு (பிடி) பாடவேளை வந்தது. இதனால் வகுப்பறை கட்டிடத்தின் அருகே உள்ள ஜல்லிகளை சேகரித்து ஓரமாக கொட்டும்படி ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
அதன்பேரில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜல்லிகளை அள்ளி ஓரமாக கொட்டி கொண்டிருந்தபோது 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஒரு மாணவன், தான் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் மற்றொரு மாணவனின் தலையில் வெட்டினார். இதில் தலையில் காயமடைந்த மாணவனை அரசன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தலைமை ஆசிரியர் அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டது.
