ஈரோடு,ஜூலை14: சித்தோடு அடுத்த முத்தாங்காட்டில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணற்றை சரி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், முத்தாங்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சித்தோடு அடுத்த முத்தாங்காடு வி.பி.ஆர் காலேஜ் நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆற்று குடிநீர் தவிர, ஆழ்துளை கிணற்று நீர் வந்து கொண்டிருந்தது.
ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு பழுதடைந்து விட்டதால், தண்ணீருக்கு மிகவும் சிரம்மப்படுகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை ஆழ்துளை கிணற்றை சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆற்று நீர் குழாய் உடைந்து விட்டால், அதனை சரி செய்வதற்கு 15 நாட்களாகிறது.அந்த சமயத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறோம். எனவே, ஆழ்துளை கிணற்றின் பழுதை நீக்கி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
