சத்தியமங்கலம், ஜூலை 13: சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மற்றும் வெராண்டா ரேஸ் அகாடமி இணைந்து, மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறன் மற்றும் அரசு போட்டித்தேர்வுகளுக்கான தயாரிப்பை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். செயலர் அருந்ததி, இணைச்செயலர் மலர் செல்வி, டீன் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் குருமூர்த்தி வரவேற்றார். ரேஸ் அகாடமியின் முதுநிலை பயிற்சியாளர் மகேந்திரவர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒன்றிய மற்றும் மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு முறைகள், தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான உத்திகள், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு அரசு போட்டித்தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி, மாதிரி தேர்வுகள், தொழில் வழிகாட்டல்,நேர்முக தேர்வு பயிற்சி, ஆளுமைத்திறன் மேம்பாட்டு வகுப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன.
