போர்பந்தர்: குஜராத்தின் போர்பந்தர் நகருக்கு அருகே உள்ள திறந்தவெளி ஒன்றில் இந்தியக் கடற்படையின் ஆளில்லா விமானம் நேற்று மதியம் விபத்துக்குள்ளானது. கடற்படை விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவுராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள இந்த கடற்கரை நகரத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள தரம்ப்பூர் கிராமத்தின் திறந்தவெளியில் இந்த ஆளில்லா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக போர்பந்தர் மாவட்ட ஆட்சியர் எஸ்.டி. தனானி தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை. கடற்படை அதிகாரிகள் ஏற்கனவே சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று கூறினார்.
