அரியலூர், ஜூலை 8:அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக மேற்பார்வையாளர் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த வகையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக, மேற்பார்வையாளர் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்பு இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கணக்கெடுப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் செய்ய வேண்டிய முக்கியப் பணிகள், பொதுவான அறிவுரைகள், கணக்கெடுப்பாளர்களின் கடமைகள், வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புக்கு முன் செய்ய வேண்டிய கடமைகள், வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பின் போது செய்ய வேண்டிய கடமைகள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.சட்ட விதிகள், கணக்கெடுப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்களின் உரிமைகள், கட்டிடங்கள், சென்சஸ் வீடுகளுக்கு இலக்கமிடுதல் மற்றும் விபரமான கோட்டுப்படம் தயாரித்தல், இணையதள வசதி, களப்பணியை தொடங்குவதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், சுயக் கணக்கெடுப்பு, குடும்ப விபரங்கள்,
மேற்பார்வையாளர் தொகுதி, சுயக்கணக்கெடுப்பு செய்த குடும்பங்களில் கணக்கெடுப்பாளர்களின் பணி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.எனவே, அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் இப்பயிற்சி வகுப்பினை முறையாக பெற்று பயன்பெற சம்மந்தப்பட்ட கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகோபால், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, அரியலூர் வட்டாட்சியர் தேவகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
