புதுடெல்லி: இந்தியாவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20) விநியோகிக்கப்படுவதால் வாகனங்களின் மைலேஜ் குறைவாதோடு, இன்ஜினும் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த விக்சித் பாரத் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒன்றிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
ஆண்டுதோறும் ரூ.22 லட்சம் கோடி மதிப்பிலான எரிபொருளை இறக்குமதி செய்வதால், புதைபடிவ எரிபொருட்களை இந்தியா சார்ந்திருப்பது பொருளாதார சுமையாக மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தூய்மையான எரிசக்தியை பயன்படுத்துவது நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இ20 பெட்ரோலால் எந்த காருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக ஒரு சம்பவம் கூட இல்லை.
இ20 பெட்ரோல் பயன்படுத்தி எந்த கார் பாதிக்கப்பட்டது? ஒரு காரின் பெயரையாவது சொல்லுங்கள் பார்க்கலாம். எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகப்படுத்துவது குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை பணம் கொடுத்து நடத்தப்படும் பொய் பிரசாரங்கள். சோளத்திலிருந்து எத்தனால் தயாரிக்க எடுத்த முடிவால் உபி, பீகார் மாநில விவசாயிகளுக்கு ரூ.45 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு கட்கரி கூறி உள்ளார்.
