பெரம்பலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து பலி

பாடாலூர்: பெரம்பலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி பாலசுந்தரம். இவரது மகள் மகாலட்சுமி(27). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் மகாலட்சுமி இன்று காலை 5.30 மணிக்கு தந்தையுடன் அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்று மாடுகளை பராமரித்துள்ளார்.

பின்னர் பாலசுந்தரம் பால் கறந்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். மாட்டு சாணங்களை அள்ளிவிட்டு வீட்டுக்கு வருவதாக தந்தையிடம் மகாலட்சுமி கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகள் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாலசுந்தரம் வயலுக் சென்று தேடினார்.

கிணறு அருகே அவரது செருப்பு மட்டும் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் பெரம்பலூர் தீயணைப்பு துறை, பாடாலூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்த மகாலட்சுமியின் உடலை மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி எஸ்எஸ்ஐ செந்தாமரை கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: