கொலை செய்யலாம், மிரட்டலாம், தாக்கலாம்… சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு: நயினார் கண்டனம்

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் தமிழகத்தையே உலுக்கிய நெல்லை இரட்டைக் கொலையின் பதற்றம் தணிவதற்குள்ளேயே, கோவை சிங்காநல்லூர் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தப்பட்டுள்ள சம்பவமும், விருதுநகர் மாவட்டம் அருகே, காரை ஏற்றி ஒரு சிறுமியைக் கொலை செய்ய முயன்றுள்ள சம்பவமும் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

பட்டப்பகலில் பொதுவெளியில் யார், யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம், தாக்கலாம், கொலை செய்யலாம் என்னுமளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதும், அதை விஜய் அரசு வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. அதிலும் குறிப்பாக, தவெக ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கே பொதுவெளியில் பாதுகாப்பளிக்க முடியாமல் முதல்வர் விஜய் திணறுவது, அவரின் நிர்வாக தோல்வியைத் தான் நமக்கு. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

* இனியொரு உயிர்ப்பலி நடக்கும் முன்னே சொன்னபடி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யுங்கள்
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின் படி, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய, 70 வயதான நாகை மாவட்ட விவசாயி சோமசுந்தரம் நெஞ்சுவலியால் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளைப் படித்தீர்களா முதல்வரே?

இந்த மரணத்தின் கறைகள் உங்கள் கரங்களிலும் படிந்துள்ளன என்பதை உணர்ந்தீர்களா?. சொன்னதை சொன்னபடி செய்யாத உங்கள் துரோகத்தை ஜீரணிக்க முடியாமல் தான், தற்போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் மன உளைச்சலுடன் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். விவசாயிகளை இனியும் வஞ்சிக்காதீர்கள். இனியொரு உயிர்ப்பலி நடக்கும் முன்னே, நீங்கள் சொன்னபடி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யுங்கள். உண்டி கொடுத்தோரின், வாழ்வாதாரத்தைப் பேணுங்கள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: