மேற்குதிசை

மேற்குதிசை

மேற்கு திசைக்கு வருணதிசை என்று பெயர். மழைக்கு அதிபதி இவர். வலது கையில் பாம்பும், இடது கையில் பாசக் கயிறும் கொண்டவர். இவருடைய துணைவிக்கு பத்மினி என்று பெயர் இவருடைய வாகனம் முதலை. கிழக்கு திசை வளரவேண்டும். மேற்கு திசை வளரவே கூடாது. மேற்கு திசை அதிகம் வளர்த்தால், பலவிதமான நிர்ப்பந்தங்கள் ஏற்படும். எனவே இதை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பெரும்பாலும் குருமார்கள், ஆசிரியர் தொழில் செய்பவர்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் போன்றவர்களுக்கு மேற்கு வாசல் உகந்தது.

வடமேற்கு

இதற்கு வாயு மூலை என்று பெயர். காற்று ஒரு இடத்தில் நிற்காது. நகர்ந்து கொண்டே இருக்கும். இந்த இடத்தில் பொருள் வைத்து விற்பனை செய்பவர்கள் விருத்தி அடைவார்கள். பொருளானது விற்பனை ஆகிக்கொண்டே இருக்கும். அதைப்போல ஒரு தோஷ பரிகாரமாக திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு இந்த வாயு மூலை உகந்தது. சில நாட்கள் அவர்கள் அந்த இடத்திலே படுக்கை அறையை அமைத்துக் கொண்டால், சீக்கிரம் திருமணம் ஆகி புகுந்த வீடு சென்றுவிடுவார்கள். இந்த திசையில் கர்ப்பிணிப் பெண்கள் படுத்துக் கொண்டால், சீக்கிரம் சுகப்பிரசவமாகும். வடமேற்கு திசை குறைந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் வம்சவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் உண்டாகும்.

வடக்குதிசை

வடக்கு திசை குபேர மூலை. குபேரதிசை என்பார்கள். செல்வத்திற்கு அதிபதி. பண பீரோ, பணப் பெட்டி வடக்கு பார்த்து வைக்க வேண்டும். இந்த திசை கிழக்கு திசையுடன் சேர்த்து வளர்ந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் அங்கே செல்வமும் மகிழ்ச்சியும் உண்டாகும். எக்காரணத்தை முன்னிட்டும் இந்த இடத்திலே தடைகளை அமைக்கக்கூடாது. காற்றோட்டமாக இருக்கவேண்டும். அதிகமான கனமுள்ள பொருள்களை வடக்கு திசையில் போட்டு அடைக்கக் கூடாது. வடகிழக்கு அல்லது வடக்கு தலைவாசல் உள்ளவர்கள் அந்த இடத்திலே மிக கனமான இரும்புப் பொருட்களை வைக்கக் கூடாது. சிலர் வீட்டு வாசலில் கால் வைக்க முடியாது. அத்தனை தடைகள் இருக்கும். அது கூடாது. அப்படி வைத்தால் அவர்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

வடகிழக்கு

வடக்கிலிருந்து கிழக்கு பக்கமாக நகர்ந்தால் வடகிழக்கு திசை. அதற்கு ஈசான்ய திசை என்று பெயர். வடகிழக்கு திசைக்கு அதிபதி ஈசானன். இருப்பதிலேயே புனிதமான திசை. ஈசனுக்கு துணைவி கௌரி. காளை மாடு வாகனமாக உடையவர். மரணத்தை வெல்பவர். குழந்தைகளைக் காப்பவர். இந்தத் திசையில் ஏதேனும் ஒரு தண்ணீர் அல்லது தண்ணீர் தேங்கும் இடம், சிறிய தண்ணீர் தொட்டி, இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பொங்கும். மரணபயம் அகலும். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். சந்தான விருத்தி இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

எக்காரணத்தை முன்னிட்டும் இந்தத் திசையை அடைத்து விடக்கூடாது. இந்தத் திசையில் காற்று வராத வண்ணம், ஜன்னல்கள் வைக்காமல் இருக்கக் கூடாது. வளர வேண்டும் என்று நினைத்தால் வடகிழக்கு திசையும், கிழக்குத் திசையும் மட்டும்தான் வளரவேண்டும். மற்ற திசைகள் வளரக்கூடாது அதைப் போலவே தென் மேற்கில் மேல்நிலை தொட்டி அமைத்துக் கொள்ளலாம்.

வடகிழக்கு திசையில் முதியவர்கள் அறையை அமைத்துக் கொள்ளலாம். மேற்கில் படுக்கை அறை, பூஜை அறை, கழிவறை முதலியவற்றை ஏற்படுத்தலாம். கிழக்கு திசையில் பூஜையறை இருக்கலாம். சாப்பாடு அறை பயன்படுத்தலாம். குழந்தைகள் அறையாக அமைத்துக் கொள்ளலாம். இதைப் போன்ற ஒரு சில அடிப்படை விஷயங்களைப் புரிந்து, வீடு, வீட்டின் அறைகளை அமைத்துக் கொண்டால், வாஸ்து குறைபாடு இன்றி, நம்மால் நன்றாக வாழ முடியும்.

Related Stories: