வலங்கைமான், ஜூலை 6: வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கழிப்பிட வசதி செய்து தர பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 650க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.இப்பள்ளியில் முன்னதாக போதிய கழிப்பிட வசதி இல்லாத நிலை இருந்து வந்தது.
இதில் கழிப்பறை அருகே புதிய கட்டுமான பணி நடைபெற்று வருவதால் முன்னதாக இருந்த கழிப்பறையின் ஒரு பகுதி பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது பள்ளியில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிப்பிட வசதிகளை செய்து தர வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
