நீடாமங்கலத்தில் இருந்து கோவைக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைப்பு: 42 வேகன்களில் சென்றது

 

நீடாமங்கலம், ஜூலை 6: நீடாமங்கலத்திலிருந்து கோவைக்கு 2,000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர், வலங்கைமான் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை சாகுபடி செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வேகன்களில் அரவைக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.சில நேரங்களில் தாலுகா பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த சன்ன ரகம் மற்றும் பொது ரக நெல் மூட்டைகளை மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி, நவீன அரிசி ஆலை சுந்தரக்கோட்டை,

திறந்தவெளி சேமிப்பு மையம் ஆதனூர் உள்ளிட்ட இடங்களிலும் சேமித்து வைக்கப்பட்ட நெல் மூட்டைகளும் அரவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடி, வலங்கலமான் தாலுகா பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்த சன்ன ரகம் 2,000 டன் நெல் மூட்டைகள் 160 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் 42 ரயில் வேகன்களில் ஏற்றினர். அரவைக்காக ஏற்றப்பட்ட நெல் மூட்டைகளுடன் சரக்கு ரயிலானது நேற்று கோவைக்கு புறப்பட்டு சென்றது.

 

Related Stories: