நீடாமங்கலம், ஜூலை. 3: நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பு அணை வறண்டு கிடக்கிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வெண்ணாற்று பாலத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கோரையாறு தலைப்பு அணை. இந்த அணை 1874ல் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணைக்கு கல்லணையில் இருந்து பிரியும் வெண்ணாறு இங்கு வந்து பாமணி ஆறு, கோரையாறு, வெண்ணாறு என 3 ஆறுகள் பிரிந்து செல்கிறது. இந்த கோரையாறு தலைப்பு அணையில் பிரியும் பாமணி ஆற்றில் 38 ஆயிரத்து 357 ஆயிரம் ஏக்கரிலும், கோரையாற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கரிலும், வெண்ணாற்றில் 94 ஆயிரத்து 219 ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீர் கல்லணை வந்து கல்லணையில் இருந்து கோரையார் தலைப்பு வந்து கோரையாறு தலைப்பிலிருந்து பிரிந்து இந்த ஆறுகளில் இருந்து செல்லும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ம் தேதி திறப்பது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு திறப்பதற்கு போதிய தண்ணீர் இல்லை. திமுக ஆட்சியில் மேட்டூர் அணையில் இருக்கும் நீரைவிட குறைவாக இருந்ந நிலையிலும் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் விவசாயத்திற்கு திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருக்கும் நிலையில் கோரையாறு தலைப்பு அணை மேட்டூர் தண்ணீரை எதிர்பார்த்து வறண்டு கிடக்கிறது.
