ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முட்டை கேட்ட மாணவிகள் மீது சத்துணவு ஊழியர் பாய்ச்சல்

 

சோழவந்தான், ஜூலை 3: சோழவந்தான் அரசுப் பள்ளியில் முட்டை கேட்ட மாணவியை, சத்துணவு ஊழியர் தகாத வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தானில் சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 60 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று மதியம் மாணவிகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. இதில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு முட்டை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் கேட்டபோது சத்துணவு ஊழியர் தேவி, அவர்களை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் உறவினர் பள்ளிக்கு வந்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவியின் உறவினர் கூறுகையில், ‘‘அரசு வழங்கும் முட்டையை வழங்காமல் சத்துணவு ஊழியர் தேவி, மாணவியை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதுகுறித்து சத்துணவு ஊழியர் தேவியிடம் கேட்டபோது, ‘‘அனைத்து மாணவர்களுக்கும் முட்டை வழங்கினேன். என் மீது எந்த தவறும் இல்லை’’ என்றார். குற்றச்சாட்டு குறித்து மாணவியின் உறவினர், சத்துணவு ஊழியரிடம் வாக்குவாதம் செய்யும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related Stories: