சேலம், ஜூலை 2: நெஞ்சு வலிப்பதாக மனைவிக்கு போன் செய்த கடலாடி லாரி டிரைவர் காட்டு பகுதியில் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி சிக்கல் ராஜக்கல்பாளையத்தை சேர்ந்தவர் சிவனேஷ்வரன் (39), கன்டெய்னர் லாரி டிரைவர். இவர் கடந்த 29ம் தேதி பெங்களூருவில் இருந்து கடலூருக்கு கன்டெய்னர் லாரியில் டூவீலர்களை ஏற்றி வந்தார். சேலம் அடுத்த காரிப்பட்டி ராமலிங்கபுரம் பஸ் ஸ்டாப் அருகே லாரி வந்தபோது சிவனேஷ்வரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு, மனைவி ஜெயபனிதாவை (28) செல்போனில் தொடர்பு கொண்டு நெஞ்சுவலிப்பதாக தகவல் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் சிவனேஷ்வரனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று, ராமலிங்கம் பஸ் ஸ்டாப் அருகே கன்டெய்னர் லாரி நிற்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது லாரியில் யாரும் இல்லை. லாரி நின்ற இடத்திற்கு அருகில் உள்ள முட்புதரில் ஒருவர் உட்கார்ந்த நிலையில் சடலமாக இருந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டதில், லாரி டிரைவர் சிவனேஷ்வரன் என்பதும், நெஞ்சுவலி ஏற்பட்ட அவர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிவனேஷ்வரனுக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
