பாவூர்சத்திரம் அருகே பைக்குகள் மோதி விபத்து வாலிபர் பலி: 3 பேர் காயம்

 

பாவூர்சத்திரம், ஜூலை 1: பாவூர்சத்திரம் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். 3 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் வேளாளர் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கல்யாணசுந்தரம் (36). இதே ஊரைச் சேர்ந்தவர் செல்லையா மகன் இசக்கி (52). இருவரும் பைக்கில் பாவூர்சத்திரம் கேடிசி நகர் நெல்லை – தென்காசி 4 வழிச்சாலை அருகே உள்ள உணவகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மேலமெஞ்ஞானபுரம் மேற்குத்தெரு ராமச்சந்திரன் மகன் நந்தகுமார் (19), அவரது நண்பரான ஆர்சி கோயில் தெரு ஆரோக்கியசாமி மகன் மைக்கேல் ஜோசப் (22) ஆகியோர் வந்த பைக்கும், கல்யாணசுந்தரம் வந்த பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த பாவூர்சத்திரம் எஸ்ஐ ராஜேஷ்குமார் மற்றும் போலீசார், 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த கல்யாணசுந்தரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான கல்யாணசுந்தரத்திற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சில நாட்களில் பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: