சிவகிரி, ஜூலை 1: பயிர் கடனை முழுமையாக ரத்து செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாசுதேவநல்லூரில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியகுளம் புதுக்குளம் ராப்பைக்குளம், இலங்குளம், பாசன அனைத்து விவசாய சங்க நீர் மேலாண்மை குழு உறுப்பினர் ராப்பைக்குளம் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். சாகுல் ஹமீது, தங்கப்பாண்டியன், திவான்ஷா, புத்திர கொண்டான், முருகேசன், செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் அசோக்ராஜ், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
பயிர் கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும், உரம் விலை உயர்வை வாபஸ் வாங்க வேண்டும். உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். நெல் கொள்முதல் விலையை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டைமலை ஆற்றில் சமர் அணை கட்டி வாசுதேவநல்லூர் பகுதி விவசாயிகளுக்கு உரிய நீரை பங்கீடு செய்ய வேண்டும். தக்க பூண்டு விதையை(கொலுஞ்சி) தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் பெரியகுளம் விவசாயி முத்துக்குமார், மதிமுக நகர செயலாளர் மாரியப்பன், மாடசாமி, சுப்பையா, ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
