பிரயாக்ராஜ்: பிரிந்து வாழும் மனைவிக்கு அவரது பெற்றோர் பணம் தருவதால், அவரது பராமரிப்பு தொகை கோரிக்கையை நிராகரித்த புலந்த்சாகர் குடும்ப நல நீதிமன்றம், இரு குழந்தைகளுக்கு தலா ரூ.3,000 பராமரிப்பு செலவு தொகை வழங்க கடந்த 2023 டிசம்பரில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கரிமா பிரசாத் அளித்த தீர்ப்பில், ‘‘மனைவியின் பெற்றோரின் வருமானத்தை அவரது வருமானமாக கருத முடியாது. பெற்றோர் உதவுவதால் மட்டுமே கணவரின் ஜீவனாம்சம் வழங்கும் கடமை நீங்கி விடாது. மேலும் மனைவிக்கு எதிராக கணவர் வைத்த ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை.
வெறும் சந்தேகம், குற்றச்சாட்டு மட்டுமே பராமரிப்பு மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியாது’’ என கூறியதோடு, பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகையை தலா ரூ.4,000 என உயர்த்தியும் மனைவிக்கு தனியாக ரூ.5,000 பராமரிப்பு செலவு தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
