செங்கல்பட்டு, ஜூன் 30: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரநாத் கலந்துகொண்டார். சிங்கபெருமாள்கோவில் மின்வாரியத்திற்க்கு 70க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளையும், தேவையான உபகரணங்களையும் உடனே வழங்க வேண்டும். புதிதாக 25க்கும் மேற்பட்ட தொழிலாளிகளை பணி அமர்த்தி மின் கட்டமைப்பை பலப்படுத்திட வேண்டும். மின் கணக்கீட்டு முறையை மாத கணக்கீட்டு முறையை அமல்படுத்திட வேண்டும். சோலார் மின் உற்பத்தியை மானியத்துடன் மக்களுக்கு வழங்கிட வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில், அனைத்து அரசு புறம்போக்கு நிலங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு உடனே மின் இணைப்பை வழங்கிட வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் பயிற்கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். ஏரி குளங்களை தூர் வாரி நீர் நிலைகளை பாதுகாத்திட வேண்டும். சிங்கபெருமாள்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும், இல்லை என்றால் பெண்களை அழைத்து மிக பெரிய பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்பாட்டத்தில் மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிங்கை கணேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு முன்னாள் மாவட்ட செயலாளர் மேகநாதன், தொகுதி செயலாளர் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
