நீடாமங்கலம், ஜூன் 30: வலங்கைமான் அருகே பேக்கரி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். வலங்கைமான் தாலுக்கா கொட்டையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவா (எ) சொட்டை சிவா (28). இவர் நேற்று முன்தினம் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் முகமது இஸ்மாயில் பேக்கரி கடையில் மதுபோதையில் கடைக்கு சென்று இஸ்மாயில் இடம் பிரட் கேட்டு தகராறு செய்துள்ளார். பிரட் தராததால் பிரட்கள், அருகில் உள்ள டீ கடை கிளாஸ் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி திட்டி கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பேக்கரி கடை உரிமையாளர் முகமது இஸ்மாயில், நீடாமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து சொட்டை சிவாவை நேற்று கைது செய்தனர். இவர் மீது நீடாமங்கலம், தஞ்சாவூர், வலங்கைமான், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
