பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கம்பம், ஜூன் 29: தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கோரி கம்பத்தில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. கம்பம் நகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. நான்கு கிலோமீட்டர் தூர மினி மாரத்தான் போட்டியானது, நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியினை கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இதில் 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர்.

இந்த போட்டியானது கம்பம் வஉசி திடலில் தொடங்கி, குமுளி ரோடு, நாலந்தா பள்ளி வழியாக ஆங்கூர்பாளையம் ரோடு மற்றும் எல்எப் ரோடு வழியாகச் சென்று மீண்டும் வஉசி திடலில் நிறைவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Related Stories: