வண்டல் மண் எடுக்க மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

 

காட்டுமன்னார்கோவில்: வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, கண்டமங்கலம் நாரைகால் ஏரியில் வருவாய் துறை மூலம் அனுமதி பெற்று, விவசாயிகள் வண்டல் மண் எடுத்து நிலத்தில் அடித்து வருகின்றனர். இந்நிலையில், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த கடலூர் தெற்கு மாவட்ட தவெக இணை செயலாளர் புலவேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் வண்டல் மண் எடுக்கும் இடத்திற்கு காரில் சென்று, ஏரியில் மண் எடுப்பதால் கட்சி நிதி ரூ. 1 லட்சம் கொடுக்க வேண்டுமென விவசாயிகளிடம் மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புலவேந்திரன் காரை மறித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடலூர் தெற்கு மாவட்ட தவெக இணை செயலாளர் புலவேந்திரன், கட்சியில் இருந்து இன்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், புலவேந்திரனை கட்சியில் இருந்து நீக்கி கடலூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் சீனுவாசன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: