வாரணாசி: டெல்லி, மும்பை போன்ற பெரிய நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுடன் 2ம் நிலை, 3ம் நிலை நகரங்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு ஹப் அண்ட் ஸ்போக் மாடல் எனப்படுகிறது. இதன்படி, சிறிய நகரங்களில் உள்ள வெளிநாட்டு பயணிகளும் புறப்படும் சிறுநகரங்களில் இருந்தே சர்வதேச பயணத்திற்கான டிக்கெட் உடைமைகள் மற்றும் குடியேற்ற சோதனைகளை முடித்துக் கொள்ளலாம்.
எனவே, சிறு நகரங்களில் (ஸ்போக்) இருந்தே டெல்லி போன்ற முக்கிய மையங்கள் (ஹப்) வழியாக உலகின் எந்த நாட்டிற்கும் செல்ல முடியும். இந்த சேவையை ஏர் இந்தியா நிறுவனம் வாரணாசியில் நேற்று அறிமுகம் செய்தது. இதன் மூலம் வாரணாசியில் இருந்து வெவ்வேறு சர்வதேச நாடுகளுக்கு செல்லும் பயணிகள் ஒரே விமானத்தில் டெல்லி வழியாக புறப்பட்டுச் சென்றனர்.
ஏர் இந்தியா சிஇஓ கேம்பெல் கூறுகையில், ‘‘ஈஸி கனெக்ட் விமானங்கள் சென்னை, அமிர்தசரஸ், அகமதாபாத், கோவா, கொச்சி, ஐதராபாத் மற்றும் பிற நகரங்களில் வரும் மாதங்களில் விரிவுபடுத்தப்படும்’’ என்றார்.
