பெரியபாளையம் அருகே அமோனியா கசிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

 

சென்னை: அமோனியா கசிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பொருட்களை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, கடல் வாழ் உயினங்களான மீன், இறால், நண்டு போன்றவை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையை சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்த மோகன், அவரது தம்பி ஜோசப் ஜெகன் ஆகியோர் நடத்தி வருகிறார்கள். தொழிற்சாலையில் 2 ஷிப்ட் முறையில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 21ம்தேதி ஆண், பெண்கள் என 120 பேர் கடல் உணவு பொருட்களை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 74 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினர். மற்ற ஊழியர்கள் வெளியில் ஓடிவந்தால் உயிர் தப்பினர். இதையடுத்து அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை சகதொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சங்காரணை, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்காக 15 பேர் ஸ்டான்லி மற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில், பூர்ணி ஜிந்தா, சுபானி ஜிங்கா ஆகிய 2 பேர் இறந்தனர்.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் காலை ஸ்டான்லி மற்றும் மஞ்சங்காரணை மருத்துவமனையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சபாபதி ஜிங்கா, குமாரி ஜிங்கா, போல்மணி, கீதா ஜிங்கா, பர்வாதி ஜிங்கா, சித்தான்ஸ், அஞ்சலி சோரன் ஆகிய 9 பேர் இறந்தனர். நேற்று காலை சுபாசி ஜிங்கா (24) என்பவரும், இன்று காலை ரீடா ஜிங்கா (20) என்பவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதைத்தொடர்ந்து, இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். மேலும் 15 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அமோனியா கசிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

 

Related Stories: