×

திண்டுக்கல்லில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ஜகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் திருமுருகன், சகாதேவன், கணேசன், பிச்சை மணி முன்னிலை வகித்தனர். சிபிஐ மாவட்ட செயலாளர் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை மேலும் பலப்படுத்தி அதில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.

வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினசரி ஊதியமாக ரூ.700 வழங்க வேண்டும். விபி கிராம திட்டம் ஜூலை 1 முதல் அமலாக்கப்படும் என்ற கடந்த மே 11ம் தேதி அறிவித்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேசிய அலைபேசி கண்காணிப்பு திட்டத்தை கைவிட வேண்டும்.
கேஒய்சி, பயோமெட்ரிக் பதிவு போன்ற உயர் தொழில்நுட்ப கட்டாய பதிவுகளை தொழிலாளர்கள் மீது திணிக்க கூடாது. பணியிட விபத்துகளில் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.

உயிரிழப்பு ஏற்படும் நேர்வுகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் வகையில் திட்டங்களை திருத்த வேண்டும். கிராம ஊராட்சிகள் மற்றும் மாநில உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். இத்திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசு கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Union government ,Dindigul ,Tamil Nadu Agricultural Workers Union ,Dindigul Collector ,Jagan ,Thirumurugan ,Sahadhevan ,Ganesan ,Pichai Mani ,CBI District ,Secretary… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...