12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள திட்டம் என தகவல்

 

சென்னை: 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தூய்மை பணிகளை தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது அரசு. விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. குப்பைகளை சேகரித்தல், குப்பை கிடங்குகளை கொண்டு செல்லுதல் பணியை தனியார் பங்களிப்பில் மேற்கொள்ள திட்டம்.

தமிழகத்தில் உள்ள 12 முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொது-தனியார் பங்களிப்பு (PPP) முறையில் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து மற்ற நகரங்களிலும் தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமா என்பது குறித்து ஒரு விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (Detailed Feasibility Report) தயார் செய்ய தமிழ்நாடு அரசு தற்போது புதிய டெண்டர் (Tender) கோரியுள்ளது. தனியார் நிறுவனங்களின் நவீன இயந்திரங்கள் மற்றும் மேலாண்மைத் திறனைப் பயன்படுத்தி நகரங்களின் சுகாதாரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவது இதன் முக்கிய நோக்கமாகும்

இத்திட்டம் முதற்கட்டமாக 12 மாநகராட்சிகளில் ஆய்வு செய்யப்பட உள்ளது. தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் செயல்படுத்த திட்டம்.

ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மைப் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட போது, ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் பணி பாதுகாப்பு மற்றும் ஊதியக் குறைப்பு போன்ற காரணங்களை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்த புதிய டெண்டர் அறிவிப்பு தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: