கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில், முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீசும், 2வது போட்டியில் இலங்கையும் வென்ற நிலையில், 3வது போட்டி நேற்று கிங்ஸ்டன் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, 20 ஓவரில் 169 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக துனித் வெல்லலேஜ் 43 ரன் அடித்தார். வெ.இண்டீஸ் பவுலிங்கில் ஷமர் ஜோசப் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து களமிறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஹெட்மயர் 32, ரோவ்மன் பவல் 33, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் நாட் அவுட்டாக 54, ஹோல்டர் 5 பந்தில் 3 சிக்சருடன் 21 ரன் விளாசினர். 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தினர். இதன்மூலம் 2-1 என தொடரை கைப்பற்றி, கோப்பையை வென்றனர். வெஸ்ட்இண்டீசின் ஷமர் ஜோசப் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.
