×

ஒன்றிய, மாநில அரசு காலி பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைக்காமல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்: ‘டி’ பிரிவு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் நிறைவேற்றப்பட வேண்டிய 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மாநில அரசின் நான்காம் நிலை (டி பிரிவு) ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கே.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டுள்ள 8வது ஊதிய குழுவில் நான்காம் நிலை ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

ஒன்றிய, மாநில அரசுகளின் பணி இடங்களை தனியார் துறைக்கு ஒப்படைக்காமல், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் நான்காம் விலை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரம் ஆக நிர்ணயிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் நான்காம் நிலை ஊழியர்களுக்கான தனியார்மயமாக்கப்பட்ட நியமன முறைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

தினக்கூலி, மொத்த ஊதியம், கவுரவ ஊதியம் பெறுவோர், பகுதிநேர ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழகத்தில் நான்காம் நிலை ஊழியர்களுக்கான காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டு, அனைத்து மாநில அரசுகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union ,D' Group Employees Association ,Chennai ,All India State Government Fourth Stage ,D Group) Employees Association ,Delhi ,Jantar Mantar ,All India ,President ,K. Ganesan ,
× RELATED மதுராந்தகம் அருகே மின்வெட்டால் மூதாட்டி உயிரிழப்பு?