வாணியம்பாடி, ஜூன் 13: வாணியம்பாடி அருகே ஆந்திரா மாநில எல்லையான ஜமான் கொல்லி பகுதியில், ஆந்திர மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக ஒரு சிலர் ஆந்திரா மாநிலம், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மதுபான கடைகளிலிருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி அதை தமிழக- ஆந்திரா எல்லையில் பதுக்கி வைக்கின்றனர். இரவு நேரங்களில் வனப்பகுதி வழியாக கழுதை மூலம் மதுபாட்டில்களை தமிழகத்திற்கு கடத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று வாணியம்பாடி அருகே உள்ள ஆந்திர எல்லையில் உள்ள ஜமான் கொல்லி பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி மகாலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டிஎஸ்பி ஸ்பெஷல் டீம் போலீசார் நேற்று இரவு வாணியம்பாடி அருகே உள்ள சிந்தகாமணிபெண்டா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியின் வழியாக கழுதை மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.92 ஆயிரம் மதிப்புள்ள 652 ஆந்திர மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
