×

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி: காங்கிரஸ் கட்சியுடன் மம்தா கட்சி இணைப்பா?: ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு

புதுடெல்லி: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இணைக்க மம்தா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அந்த கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் 60 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து சென்று விட்டனர். மேலும் 20 எம்பிக்களும் அந்த பிரிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா, டெல்லியில் சோனியாகாந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். அவரை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒன்றரை மணி நேரம் சந்தித்துப் பேசினார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மம்தா, மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க விரும்புவதாக தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பாக மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் சுபங்கர் சர்க்கார் கூறுகையில்,’அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. எனவே, நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எங்கள் தலைவர் ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவர் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை. அவர் பலவிதமான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மற்றும் துன்பப்படும் மக்களின் குரலாக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவரே பிரதமராக வேண்டும். இதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. துணிச்சல் இல்லாதவர்கள் காங்கிரஸில் இணைய மாட்டார்கள். தவறான நபர் வாஷிங் மெஷினை தான் தேடுவார்’ என்றார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக வெளியான தகவல் வதந்தி மற்றும் அடிப்படையற்றது என்று மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

பாஜவுக்கு தாவும் எம்பிக்களில் யூசுப் பதான், சத்ருகன் சின்ஹா;
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜவுக்கு தாவும் பட்டியலில் 19 எம்பிக்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் முக்கியமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், நடிகர் சத்ருகன் சின்ஹா, ககோலி கோஷ் தஸ்திதார், சயோனி கோஷ் உள்ளிட்டோர் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் ஜகதீஷ் சந்திர பாசுனியா (கூச் பெஹார்), காளி உர் ரஹ்மான் (ஜாங்கிபூர்), அபு தாஹிர் கான் (முர்ஷிதாபாத்), பார்த்தா பூமிக் (பாரக்பூர்), பாபி ஹல்தார் (மதுராபூர்), மாலா ராய் (கொல்கத்தா தெற்கு), மிதாலி பாக் (ஆரம்பாக்), தீபக் அதிகாரி (ஜூனேப்பூர் சோஹட்டல்), சக்ரவர்த்தி (பாங்குரா), டாக்டர் ஷர்மிளா சர்க்கார் (பர்தமான் கிழக்கு), அசித் குமார் மால் (போல்பூர்), சதாபதி ராய் (பிர்பூம்), ரச்சனா பானர்ஜி (ஹூக்லி) ஆகியோரும் கடிதம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : West Bengal Assembly Election Defeat ,Mamata ,Party ,Congress ,Abhishek Banerjee ,Rahul ,New Delhi ,Trinamool Congress party ,Congress party ,West Bengal Assembly Elections ,Trinamool Congress ,Mamata Banerjee ,
× RELATED சொல்லிட்டாங்க…