சாலையை சீரமைக்காத நிலையில் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாக பதிலளித்த பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அதிர்ச்சி

வத்திராயிருப்பு, ஜூன் 8: வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டியில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படாத நிலையில், சாலை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் பதிலளித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி 9 மற்றும் 10வது வார்டு கூமாப்பட்டி பள்ளிவாசல் தெரு, ரைஸ் மில் தெரு, காயிதே மில்லத் தெரு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் அம்ரூட் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்றது.
இதற்காக சாலை தோண்டப்பட்டு குழாய்கள் பாதிக்கப்பட்டது. சாலையை சீரமைக்க கோரி பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டதற்கு, அம்ருத் பணிகள் நிறைவடைந்த பின்னர் தான் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து மத்திய அரசின் குறைதீர் மற்றும் கண்காணிப்பு அமைப்பு, முதல்வரின் முகவரி அமைப்பில் கூமாபட்டியை சேர்ந்த முகமது யாசிர் சாலையை சீரமைத்து பேவர் பிளாக் சாலை அமைக்க கோரி மனு அளித்தார். இந்த மனுவிற்கு பதிலளித்த பேரூராட்சி செயல் அலுவலர், எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் 2025 – 2026 கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.55 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தப் பகுதியில் நடைபெறும் சாலை பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது என பதிலளிக்கப்பட்டுள்ளது. எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி 9 மற்றும் 10வது வார்டுகளில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்காத நிலையில், பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது என பேரூராட்சி நிர்வாகம் பதில் அளித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: