தென்காசி மாவட்டத்தில் ஜுன் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

தென்காசி, ஜூன் 4: 2026ம் ஆண்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) வரும் 13ம் தேதி அன்று உச்சநீதிமன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை நடத்த சென்னையில் உள்ள மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனையின் படி தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் மாவட்டம் உட்பட நான்கு தாலுகாவில் வரும் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட உள்ளது.

மேற்கூறிய தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், காசோலை வழக்குகள் போன்ற வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கி கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
மேலும் தென்காசி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும் 13ம் தேதி அன்று காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தினை தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ராஜவேல் துவக்கி வைக்கிறார். பொதுமக்கள் தங்கள் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பின் அவற்றை மேற்கூறிய தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சுமூகமான முறையில் தீர்வு காணலாம். மேலும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: