பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த மானூர் தபால் நிலையம் தனியார் கட்டிடத்துக்கு இடமாற்றம்

மானூர், ஜூன் 4: மானூரில் நூற்றாண்டை கடந்த பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தபால் நிலையம், தனியார் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மானூரில் காவல் நிலையத்திற்கு பின்புறம் மானூர் துணை தபால் நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு ஒரு தபால் அதிகாரி இரண்டு அலுவலர்கள் பணி புரிகின்றனர் இதன் கீழ் களக்குடி தெற்குப்பட்டி சீதைக்குறிச்சி எட்டாம் குளம் மதவை குறிச்சி கரம்பை கானார் பட்டி பிள்ளையார் குளம் கட்டர்ங்குளம் என 9 போது கிளை தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த தபால் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் தினமும் 1000க்கும் மேற்பட்ட தபால்கள் விநியோகம் செய்யப்படுகின்றன இந்த தபால் நிலையத்தில் மாதம் 2 கோடிக்கு மேல் பண வரவு செலவு செய்யும் பயனாளிகள் உள்ளனர் விறுவிறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தபால் நிலைய கட்டிடம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் தகடு கூரைகளால் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடம் வாடிக்கையாளர்களுக்கும் பயனாளிகளுக்கும் பதிவேடுகளுக்கும் பணி புரியும் அலுவலர்களுக்கும் பாதுகாப்பின்றி எந்த நேரத்திலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுவர்களில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டு மழை நீர் உட்புகுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன அதன் அருகாமையில் உள்ள தபால் நிலைய பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடமும் சுற்றுச் சுவரும் இடிந்து விழுந்தன.

இதையடுத்து தபால் நிலையத்தை பாதுகாப்பான கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் இது குறித்த கோரிக்கை ெசய்தி தினகரனில் வெளியானது. அதன்பேரில் கள ஆய்வு நடத்திய உயர் அதிகாரிகள் பாதுகாப்பான கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர். அதன்பேரில் மானூர் பஜாரில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல்தளத்திற்கு கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதை வரவேற்றுள்ள பொதுமக்கள், இதற்காக குரல் கொடுத்த தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். அத்துடன் ஏற்கனவே செயல்பட்டு வந்த தபால் நிலைய கட்டிடத்தின் இடம் தபால் துறைக்கு சொந்தமானது என்பதால் உடனடியாக அங்கு நிரந்தர தபால் நிலைய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: