நாகர்கோவில், ஜூன் 4: தக்கலை பகுதியில் இரு ஆக்கர் கடைகளில் திருட்டு நடைபெற்றுள்ளது. திருவிதாங்கோடு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமிபாலன்(50). இவர் கைதக்குழி பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் ஆக்கர் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கடைக்கு வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பழைய செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள், கடையில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் டிவிஆர் பாக்ஸ் உள்பட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து லெட்சுமிபாலன் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல், வில்லுக்குறியில், செல்வராணி என்பவர் ஆக்கர் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்தபோது, பூட்டை உடைத்து, ரூ.58 ஆயிரம் ரொக்கம், கேஸ் சிலிண்டர், கவரிங் நகைகள், செம்பு, பித்தளை பாத்திரங்கள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
