ஈரோடு, ஜூன் 4: தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என திமுக எந்த சதியும் செய்யவில்லை என்றும் விஜய்க்கு ஏன் வாக்களித்தோம் என பொதுமக்கள் உணர்ந்திருப்பார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் முத்துசாமி கடுமையாக விமர்ச்சித்துள்ளார். கருணாநிதியின் 103வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் தவெக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கேட்கின்றனர். 6 மாதங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல், இந்த ஆட்சி நடக்கட்டும். அதற்கு பிறகு குற்றங்களை எடுத்துச்சொல்லலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும், தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எடுத்துச்சொல்லாமல் இருக்க முடியாது. தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகள் அனைத்தும் சட்ட ஒழுங்கில் தான் வருகிறது.
