டிரோன்கள் மூலம் ஈரான் அதிரடி; குவைத் ஏர்போர்ட்டில் தாக்குதல்: இந்தியப் பயணி பலி; பலர் காயம்

துபாய்: ஈரான் மற்றும் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை நடத்திக்கொண்ட நிலையில் குவைத் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் இந்திய பயணி பலியானார். ஈரான் -இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் ஈரானும், அமெரிக்காவும் ஒன்றின்மீது ஒன்று தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்தன. இந்த தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களில் குவைத் விமான நிலையத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலை தொடர்ந்து வர்த்தக விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளதாக குவைத் நேற்று தெரிவித்துள்ளது.

இது குறித்து குவைத் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியவர் ஜெனரல் சவுத் அப்துல் -அஜிஸ் அல் ஒதைபி கூறுகையில்,‘‘பல தீங்கிழைக்கும் டிரோன்கள் குவைத் சர்வதேச விமானநிலையத்தின் பயணிகள் கட்டிடத்தை குறிவைத்து தாக்கின. இதில் கட்டிடம் கடுமையான சேதமடைந்தது. பலர் காயமடைந்தனர்” என்றார். ஈரான் தாக்குதலில் இந்தியர் உயிரிழந்தது குறித்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் எக்ஸ் தள பதிவில், ‘‘தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதற்கு குவைத் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: