×

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்; சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆனார் மகேஷ்குமார் அகர்வால்: சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார் சந்தீப் ராய் ரத்தோர்

 

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தால் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக அதிரடியாக மாற்றப்பட்டார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக சட்டசபை தேர்தல், கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டத்தில் நடத்தப்பட்டது. இதனையொட்டி தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதன்படி, தமிழகத்திற்கான பொறுப்பு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழலில், தேர்தல் முடிந்து த.வெ.க. தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று உள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், தமிழகத்தின் புதிய நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் ஒன்றிய அரசுடன் தமிழக அதிகாரிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. பதவிக்காக ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியல் யு.பி.எஸ்.சி.யில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையில் மிக உயரிய பதவியாக விளங்கும் தமிழக டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நேற்று அவர் மத்திய எல்லை பாதுகாப்பு படையில் இருந்து விடுவிக்கப்பட்டார். புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால் இன்று காலை 11:30 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பதவியேற்றார். வழக்கமாக ஒரு மாறுதல் செய்யப்படும்போது பழைய அதிகாரி, புதிய அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார். ஆனால் மகேஷ்குமார் அகர்வாலிடம் சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை. மகேஷ்குமார் அகர்வாலே பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

தமிழக காவல்துறையின் 34வது டிஜிபியான மகேஷ்குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா நகரில் பிறந்தவர். சட்டம்- ஒழுங்கு பணியில் மிகுந்த அனுபவம் கொண்டவர் மகேஷ் குமார். 1994ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால். சட்டப்பிரிவில் பிஏ பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப்படிப்பும் படித்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளை நன்கு அறிந்தவர். சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சென்னை போக்குவரத்து துணை ஆணையர், தூத்துக்குடி எஸ்பி ஆக இருந்தவர். சிசிடிவி கேமராக்களை சென்னை நகரில் நிறுவ வலது கரமாக செயல்பட்டவர். நைட் கிரைம் டூ ஜீரோ என்ற திட்டத்தை காவல்துறையில் அறிமுகப்படுத்தியவர்.

சேலம் ரயில் கொள்ளை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை கையாண்டவர். மெச்சத்தகுந்த பணிக்காக முதலமைச்சரின் பதக்கத்தைப் பெற்றவர் மகேஷ் குமார். டிஜிபியாக பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வாலுக்கு பல போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.மகேஷ்குமார் அகர்வால் 1972ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பிறந்தவர். இதனால் அவர் 2032ம் ஆண்டு மார்ச் மாதம்தான் ஓய்வு பெறுவார். நிரந்தர டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ்குமார் அகர்வால் கண்டிப்பாக 2 ஆண்டுகள் சட்டம் ஒழுங்கு பதவியில் நீடிப்பார். ஆனால் அரசு நினைத்தால் அவர் ஓய்வு பெறும்வரை அதாவது தொடர்ந்து 6 ஆண்டுகள் பணியில் நீடிப்பார். இவருக்கு மூத்தவரான சந்தீப் ராய் ரத்தோர் 2028ம் ஆண்டு பிப்ரவரியில் ஓய்வு பெறுவார்.

அதே ஆண்டு டிசம்பரில் ராஜீவ்குமார் ஓய்வு பெறுவார். வன்னியப்பெருமாள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகிறார். மேலும் மகேஷ்குமார் அகர்வாலுக்கு ஜூனியராக உள்ள வெங்கட்ராமன் 2028 மே மாதமும், வினித் தேவ் வாங்டே 2030 மே மாதமும், சஞ்சய் மாத்தூர் 2028 மார்ச் மாதமும், டேவிட்சன் தேவாசீர்வாதம் 2028 ஜனவரி மாதமும், சந்தீப் மித்தல் 2028 ஆகஸ்ட் மாதமும், பாலநாகதேவி 2029 நவம்பர் மாதமும், சங்கர் 2028ஜூன் மாதமும், அமல்ராஜ் 2031 ஜூன் மாதமும், ஆயுஸ்மணி திவாரி 2031 ஜனவரி மாதமும், சுமீத் சரண் 2031 செப்டம்பர் மாதமும், அபின் தினேஷ் மோடக் 2030 ஜூன் மாதமும், சஞ்சய்குமார் 2027 ஜூலை மாதமும், தினகரன் 2031 ஜூலை மாதமும் ஓய்வு பெறுகின்றனர்.

அதாவது சீனியராக உள்ள 3 போலீஸ் அதிகாரிகளும், ஜூனியர்களாக உள்ள 13 போலீஸ் அதிகாரிகளும் சட்டம் ஒழுங்கு பணிக்கு வருவது சந்தேகம்தான் என்கின்றனர் போலீஸ் உயர் அதிகாரிகள். ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மகேஷ்குமார் அகர்வாலை மாற்றினால் மட்டுமே ஜூனியர்களுக்கு சட்டம் ஒழுங்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக பதவி வகித்து வந்த சந்தீப் ராய் ரத்தோர், சென்னை சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கூடுதல் இயக்குநராகப் பணிபுரிந்து வந்த சங்கர், தற்போது காலியாக உள்ள சென்னை அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதுவரை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) அந்தஸ்தில் இருந்த சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் பதவி, தற்போது டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரின் புதிய நியமனத்திற்காக டிஜிபி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

Tags : DGP ,MAHESHKUMAR AGARWAL ,PRISON ,SANDEEP RAI RATHOR ,Chennai ,Sandeep Rai Rathore ,Tamil Nadu Assembly Election Commission ,Tamil Nadu Assembly elections ,Tamil Nadu Assembly Election ,
× RELATED அரசின் வளர்ச்சிப் பணிகளை...